0
கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தானே அழிக்கும் இயந்திரத்தை (டஸ்டர்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.பள்ளி, கல்லூரிகளில் கரும்பலையில் ஆசிரியர்கள் எழுதியதை அழிக்கும் பழக்கம், பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இதில் எழும் தூசி, ஆசிரியர்கள், முதல் வரிசையில் உள்ள மாணவர்களின் நாசி, வாயில் புகுந்து, கண்களையும் "பதம்' பார்க்கின்றன. காற்றில் தூசி பறப்பதால் மூச்சு குழாயில் படிந்து திணறல், இரப்பை பாதிப்பு, ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், இக்கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் மணிகண்டன் வழிகாட்டுதலில், தூசிகளை தானாக உள்வாங்கும் வகையிலான இயந்திரத்தை, மாணவர்கள் சுதர்சன், ஜான் பேட்ரிக், லக்ஷ்மண பாண்டியன் கண்டுபிடித்துள்ளனர்.

இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மாணவர்கள் கூறியதாவது:இக்கருவி மிக சிறிய "டி.சி.', பேட்டரிகள் உதவியுடன், சுழலக்கூடிய உருளையும், கரும்பலகையின் மேற்பரப்பினை துடைக்கும் வகையில் "ஸ்பான்ச்' அடைப்பையும், தூசியை உறிஞ்சி உள்வாங்கும் வகையில் வெற்றிடத்தையும் கொண்டுள்ளது. "ஸ்பான்ச்' பரப்பு மூலம் கரும்பலகையை துடைக்கும்போது எழும் தூசியை, இயந்திரத்தில் உள்ள "இம்பெல்லரின்' உதவியுடன், காற்று அழுத்த வேறுபாட்டால் உள்வாங்கப்படுகிறது. பின், இத்தூசி, இயந்திரத்தின் பின்புறம் உள்ள மூடியினை சுற்றி எளிதாக அப்புறப்படுத்த முடியும். "டி.சி.', மோட்டாரினை 6 வோல்ட் ரீ சார்ஜர் பேட்டரி மூலம் இயக்கலாம். இக்கண்டுபிடிப்புக்கு மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் கிடைத்துள்ளன. காப்புரிமைக்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, என்றனர். தொடர்புக்கு: 96003 75600

கருத்துரையிடுக Disqus

 
Top