0

ஒரு கல்லூரிக் காதலர்கள். காதலிக்கு அறிவியல் பாடத்தில் சில சந்தேகங்கள். தன் காதலனிடம் தெளிவு படுத்துமாறு கேட்கிறாள்.
இதோ அந்த உரையாடல்,

உனக்கு எந்த பாடத்துல என்ன சந்தேகம்னு சொல்லு உனக்கு புரியிற மாதிரி சொல்ல முயற்சி செய்யிறேன்.




எனக்கு டார்வின் பரிணாமக் கோட்பாடும் நியூட்டன் விதிகளும் எத்தன தடவ படிச்சாலும் புரிய மாட்டேன்குது. நீ கிண்டல் பண்ணாம ஒழுங்கா சொல்லிக் கொடுக்கிறதுன்னா சொல்லிககொடு இல்லனா ஆள விடு. இன்னும் நாலு தடவ படிச்சி பாக்குறேன்.

இல்ல இல்ல நான் ஒழுங்கா சொல்லித் தர்றேன் இப்படி பக்கத்துல வா.

ம்ம்.. சரி சொல்லு.

”இவ்வுலகின் தொடக்க காலத்தில்
என்றோ பெய்த மழையில்
நீர்த்துளியின் கருவில் உருவான
ஒரு செல் உயிரியிலிருந்து
யுகயுகமாகப் படிப்படியாக
இடத்திற்கும் சூழ்நிலைக்கும்
ஏற்றபடி உருமாறி
குரங்கிற்கு அடுத்த படியாய்
உருவானவன் தான் மனிதன்...
இதுவே டார்வின் பரிணாம விதி”



புரிஞ்சுதா ??

ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. ம் சரி நியூட்டன் விதிகள்.

நல்லா கேட்டுக்க


”Every object in a state of uniform motion tends to remain in that state of motion unless an external force is applied to it.”

"வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்."

இது தான் நியூட்டனின் முதல் விதி

இதத்தான் புக்லயும் போட்டிருக்காங்க இதக்கொஞ்சம் ஈஸியாப் புரியிற மாதிரி சொல்ல முடியுமா ?

ம்.. முடியும் ஆனா நீ கோபப் படக்கூடாது சரியா ?

சரி சொல்லு

நீயும் நானும் சந்திக்கிறதுக்கு முன்னாடி நீ நீயாத்தான் இருந்தே நான் நானாத்தன் இருந்தேன் தெளிவாத்தான் இருந்தோம்,    நாம ரெண்டு பேரும் சந்திச்சு நமக்குள்ள காதல் வந்த பிறகு தான் இப்பிடி என்னன்னமோ பேசிக்கிட்டு இருக்கிறோம். இதத்தான் இந்த மாற்றத்தத் தான் நியூட்டன் அவர் பாஷைல முதல் விதின்னாரு.


ம்ம்... பாத்தியா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்ட. ஆனா, ஏதோ புரியிற மாதிரி இருக்கு,
சரி நியூட்டனின் இரண்டவது விதி,

சொல்றேன் கேட்டுக்க


”The relationship between an object's mass m, its acceleration a, and the applied force F is F = ma. Acceleration and force are in this law the direction of the force vector is the same as the direction of the acceleration vector.”

”ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்”

இது தான் நியூட்டனின் இரண்டவது விதி.

ம்.. இதயும் முதல் விதிய சொன்ன மாதிரி கொஞ்சம் புரியுற மாதிரி ஈஸியா சொல்லித்தாயேன்.

சரி கேட்டுக்க

நீ என் மேல வச்சிருக்கிற அன்பும் சரி நான் உன் மேல வச்சிருக்கிற அன்பும் சரி சில நேரம் பார்க்கிறதுக்கு கூடக் குறைச்சலா இருக்கிற மாதிரி வெளிப் பார்வைக்கு தெரியும். அதாவது நாம தனிமையான இடத்துல இருக்கிறப்ப இடைவெளி குறைச்சலா உட்கார்ந்து இருப்போம். பொதுவான இடத்துல இருக்கிறப்ப கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்து இருப்போம். இடைவெளி கூடுறதுனாலயோ குறையுறதுனாலயோ நம்ம காதல்ல எந்த ஒரு மாற்றமும் இருக்காது.

இந்த மாறாத தன்மையத் தான் நியூட்டன் இரண்டாவது விதின்னாரு. என்ன புடிஞ்சுதா ?

ம்ம்... புரியுது புரியுது. சரி மூன்றாம் விதியையும் இதே மாதிரி சொல்லு

ம்ம்ம்... சொல்றேன் சொல்றேன்


”For every action there is an equal and opposite reaction”

”ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது”

இது தான் நியூட்டனின் மூன்றாம் விதி.

இப்ப உனக்குப் புரியுற மாதிரி சொல்றேன் கேட்டுக்க


நான் உனக்கு அழுத்தமா ஒரு முத்தம் கொடுக்குறேன்னு வச்சிக்க
உடனே அதே வேகத்துல திரும்ப நீ எனக்கு அந்த முத்தத்தக் கொடுக்கிறதத் தான் நியூட்டன் தன்னோட மூன்றாம் விதியில சொல்லி இருக்கிறாரு.

என்ன புரிஞ்சுதா ?

ஆங்ங்... இத்தான் ச்சான்ஸுன்னு உன் ஆசைய நைசா சொல்லிடுவிய

ஹேய்... நீதானே உனக்கு புரியுற மாதிரி சொல்லச் சொன்ன அதான் சொன்னேன்

ம்ம்ம்... நான் சொல்லச் சொன்னது நியூட்டன் விதிய உன்னோட ஆசைய இல்ல

சரி சரி ஏதோ ஒன்னு உனக்குப் புரிஞ்சதா இல்லாயா ? இந்த முத்த விதி.

ஐயா சாமி ஆள விடுப்பா மொதல்ல, எக்ஸாமுக்குப் படிக்க வேண்டியது நெறைய இருக்கு....


( விதிகள் தொடரும் )

(விஞ்ஞான விதிகளை எளிய தமிழில் கதை வடிவில் சொல்ல ஒரு சிறிய
முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை பிழையிருப்பின் பொறுத்தருள்க)

கருத்துரையிடுக Disqus

 
Top