0
கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. பல தோட்டங்களில், அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், 'புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா?, கிணற்றைத் தூர் வாரலாமா?’ என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக... கோடை காலத்தில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர் வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ்.


''கோடை காலங்களில் கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயிருப்பதுதான் தண்ணீர் குறைவுக்குக் காரணம். கோடையில் உங்கள் கிணறுகளில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தாலும்... 'இன்னமும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதனால், கவலைகொள்ளத் தேவையில்லை. கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ... அந்த அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, வாய்க்கால் பாசனத்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக, குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்யலாம். அதனால், புது போர்வெல் பற்றி யோசிக்கத் தேவையில்லை'' என்ற பிரிட்டோ ராஜ் தொடர்ந்தார்.



போர்வெல் போடாதீர்கள்!
''பொதுவாக, கோடை காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடை காலங்களில் தண்ணீர் இருக்காது. 80 அடி, 150 அடி,
320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால்,
 
தண்ணீரைத் தேடி அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும். அதிக ஆழத்துக்கு ஊடுருவி, 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்... போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள், ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, 'பணம் செலவாகும்’ என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்துக்கு இறக்க மாட்டார்கள். ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். அப்போதுதான் போர்வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து 'நீர் மூழ்கி மோட்டார்’களை குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழ் இறக்க முடியாமலோ... அல்லது எடுக்க முடியாமலோ போய்விடும்.  

இறந்து போன போர்வெல்லிலும் தண்ணீர்!

'புது போர்வெல் அமைச்சு, தண்ணிக்குப் பதிலா வெறும் புகைதான் வந்தது’ என வேதனைப்படும் விவசாயிகள் அனேகம் பேர். ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படி புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான். அதற்கு, இந்தக் கோடைதான் சரியான நேரம். கோடையில் நிச்சயம் ஒரு மழை கிடைக்கும். அந்த மழை நீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, 'நீர்ச் செறிவூட்டல்’ செய்தால், தண்ணீர் ஊறி விடும்.

 
 

கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மூன்றடி தூரத்தில்... 6 அடி நீளம், 6 அடி அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழியின் அடிப்பாகத்தில் இருந்து அரையடி உயரத்தில் 2 அங்குல பைப் ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையை கிணறு அல்லது போர்வெல்லுக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். பிறகு, குழியில் 3 அடி உயரத்துக்கு கூழாங்கற்கள் அல்லது அருகில் கிடக்கும் சிறிய கற்களை நிரப்பி வைத்தால்... மழைநீர், கற்களில் வடிகட்டப் பட்டு கிணறுகளில் சேகரமாகும். இப்படி தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும்போது, ஏற்கெனவே ஊற்றுக்கண்களை அடைத் திருக்கும் சிமெண்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து... 'இனி தண்ணீரே கிடைக்காது’ என நீங்கள் நினைத்த... இறந்துபோன போர்வெல்லிலும் தண்ணீர் கிடைக்கும். மழை கிடைத்த நான்காவது நாளே, உங்கள் போர்வெல் குழாயில் சிறிய கல்லை கயிற்றில் கட்டி இறக்கி... தண்ணீர் ஊறி இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

மானாவாரி விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலங்களில் தாழ்வான பகுதிகளில், வரப்பு ஓரங்களில் ஆங்காங்கே 20 அடி நீளம், ஒரு அடி ஆழம் உள்ள வாய்க்கால்களை எடுக்க வேண்டும். குழியில் எடுக்கும் மண்ணை குழியின் மேல் பகுதியில் அணைபோட வேண்டும். இப்படிச் செய்தால், மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர், குழிகளில் சேகரமாகி, நிலங்களில் படுக்கை வசத்தில் நீர் பரவி, மண்ணின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும்'' என்ற பிரிட்டோ ராஜ் நிறைவாக,

உயிர் உரங்களை உடனே போடுங்க!

''கோடை காலங்களில் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. செடிகளின் வேர்களில் இருந்து அரையடி தூரத்தில் மண்வெட்டியால் மண்ணைக் கிளறி, அசோஸ்பைரில்லம், அசோட்டா ஃபேக்டர், சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்களை மண்ணுடன் கலந்து மூட வேண்டும். பெரிய மரப்பயிர்களுக்கு 3 கிலோ வரையும், சிறிய பயிர்களுக்கு அரை கிலோ வரையும் கொடுக்கலாம். வேளாண்மைத்துறை கிடங்குகளில் மானிய விலையில் இவை கிடைக்கின்றன. இந்த உயிர் உரங்கள், மண்ணைப் பொலபொலப்பாக்கி, வேர்களுக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்கின்றன. அத்துடன் நீரையும், மண்ணையும் பிணைக்கும் வேலையைச் செய்கின்றன. மண்துகள்கள், சல்லிவேர்களுக்கிடையே ஒரு இணைப்பு உண்டாவதால், சல்லிவேர்கள் சத்துக்களை எளிதில் எடுத்துக் கொள்ள ஏதுவாகும்'' என்றார்.
தொடர்புக்கு,  பிரிட்டோ ராஜ்,
செல்போன்: 99444-50552

கருத்துரையிடுக Disqus

 
Top